திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையோரப் பிரதேசத்தின் செந்தூர் பிரிவில் கடல் மட்டி சேகரிப்பினை தங்களது பிரதான வாழ்வாதாரமாக கொண்ட 60 பெண் பயனாளிகளுக்கு(16) வல்லங்களை குளோபல் வன் ஸ்ரீலங்கா (Global One -SriLanka) நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஜேர்மன் தூதரகத்தினால் நிதியளிக்கப்பட்ட”வாழ்க்கை மாற்றத்திற்கான வாழ்வாதாரம்: கரையோர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான மானியம்” எனும் இத்திட்டமானது ஏழை மற்றும் பின்தங்கிய கரையோர சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாழ்வாதார உதவி வழங்குதலை நோக்காக கொண்டமைந்துள்ளது.
விநியோக நிகழ்வின் போது Global One -SriLanka பணிப்பாளர் திரு. முகம்மது அன்சாரி, குச்சவெளி பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர் திரு. முகம்மது நாசிக், திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வ. இம்ஜத் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும் குளோபல் ஒன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் உரையாற்றுகையில்:-
இப் பிரதேசத்தில் உள்ள இவர்களை நிலையான மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட, கூட்டு சிறு கைத்தொழில் மாதிரி ஒன்றினை முன்னெடுப்பதற்கான தொடர் முயற்சிக்கு செல்ல இருப்பதாகவும் அவர்களுக்கு மின்சார இயந்திரங்கள் மற்றும் உட் கட்டுமான வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை நிர்மாணித்தது வணிகத்தை நடத்துவதற்குத் தேவையான திறன்களுடன் அவர்களை வலுப்படுத்துவது தொடர்பான இரண்டாம் கட்ட முன்னெடுப்புக்கள் தொர்பாக சுருக்கமாக தெளிவுபடுத்தினார்.