எதிர்கால முயற்சியாளர்களை தேடும் அழகிய ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களிற்கு இடையே இடம்பெற்ற சித்திரம் மற்றும் கட்டுரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வானது இன்றையதினம் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த போட்டி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தரம் 06 தொடக்கம் உயர்தர பாடசாலை மாணவர்களிடையே குறித்த போட்டியானது இடம்பெற்றதுடன் இதில் வெற்றிபெற்ற 60 மாணவர்களிற்கான பரிசில்கள் பிரதம விருந்தினர்களால் வழங்கப்பட்டதுடன், வறுமைக்கோட்டிற்குட்பட்ட40 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் தமயந்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் முகுந்தன், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.