வவுனியா மன்னார் வீதியில் அங்காடி வியாபாரி ஒருவர் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டமையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று மாலை வவுனியா மன்னார் வீதி காமினி மகாவித்தியாலய பாடசாலை அருகே இடம்பெற்றது.
இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் இவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டளைக்கமைவாக வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அங்காடி வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இதன் முதற்கட்டமாக அரச அலுவலகங்களிற்கு முன்பாக காணப்படும் அங்காடி வியாபார நிலையங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக நகரசபையினால் ஒலிபெருக்கி மூலமாக நேற்றையதினம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, காமினிமகாவித்தியாலைய வீதிகளில் அறிவுறுத்தலை மீறி அரச அலுவலகங்களிற்கு முன்பாக காணப்பட்ட அங்காடி வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு வவுனியா காமினி மகாவித்தியாலையத்திற்கு முன்பாக காணப்பட்ட சோளம் விற்பனை செய்யும் இடத்தினை அகற்ற முற்பட்ட போது குறித்த வியாபாரி நகரசபை உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டதுடன், விற்பனைக்கு வைத்திருந்த தனது சோளன், பனங்கிளங்கினை பிரதான வீதியில் வீசியதுடன், வீதிக்கு குறுக்காக படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக அப்பகுதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்கு கொண்டுவந்திருந்தன்.