வவுனியாவில் இருந்து 2023ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 537 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் சி. கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான காலப்பகுதியில் அதிகளவான ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டு பணியாளர்கள், தொழிலாளர்களாக சவுதி, கட்டார், குவைத் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிற்கு மாதம் 175 பேர் வரை பயணமாகின்றனர்.
இதில் 90 வீதமானவர்கள் பயிற்சி அற்ற தொழிலாளர்களாகவே செல்கின்றனர். மேலும் கடந்த 2022ம் ஆண்டில் தொழிலாளர்களாக இலங்கையில் இருந்து 311,263 பேர் வரை சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பெருமளவு எண்ணிக்கையானோர் தொழிலாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.